செங்கம் கல்வி மாவட்டம் பாரத சாரண இயக்கம் சார்பில் உலக சிந்தனை நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். பாரத சாரண சாரணிய இயக்க மாவட்டச் செயலர் வெங்கடேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். தீயணைப்பு துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சிக்கு முன்னதாக உலக சிந்தனை நாள் பேரணியை மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் தொடக்கி வைத்தார். பேரணி செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து முக்கிய வீதி வழியாக சென்று செங்கம் பேருந்து நிலையம் வரை சென்றனர் . பின்னர் மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் உலக சிந்தனை நாள் சான்றிதழ் சாரண சாரணிய இயக்க மாணவ-மாணவிகளுக்கு வழங்கி பாராட்டினார். மேலும், சாரண சாரணியர் மாணவிகளுக்கு தீ தடுப்பு, மீட்பு, முதலுதவி பணிகளில் எவ்வாறு ஈடுபடுவது என்பது குறித்து செங்கம் தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து ஏற்படும்போது பதட்டமில்லாமல், எவ்வாறு உயிர் காக்க செயல்பட வேண்டும் என்பதை விளக்கி,தீ தடுப்பு சாதனங்களை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து செயல்விளக்கமும் செய்து காண்பித்தனர். நிகழ்ச்சியில் சங்கம் கல்வி மாவட்டத்தைச் சார்ந்த சாரண ஆசிரியர்கள் மற்றும் சாரணிய ஆசிரியர்கள் உட்பட 300 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட பொருளாளர் வேலாயுதம் நன்றி கூறினார். செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
You must be logged in to post a comment.