சுரண்டையில் ஜமீன் சொத்து என்ற பெயரில் போலி பத்திரம் தயாரித்து காவல்துறைக்கு வழங்கப்பட்ட நிலம் விற்பனை- 7 பேர் கைது..
தென்காசி மாவட்டம் சுரண்டையில் காவல் துறைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் சுரண்டை சங்கரன் கோவில் சாலையின் மையப்பகுதியில் 2.15 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.
கடந்த சில வருடங்களாக இந்த இடம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்ததால் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, ஜமீன் சொத்து என்பதாக போலி ஆவணம் தயாரித்து ஆயன் நம்பியார் என்பவருக்கு 2.15 ஏக்கர் நிலத்திற்கான பவர் பத்திரம் தயாரித்து மொத்த இடத்தையும் போலி பத்திரம் மூலம் பெயர் மாற்றி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு உடந்தையாக ராஜேந்திரன் இள நிலை உதவியாளர் இருந்துள்ளார். இந்த நிலையில் அந்த இடம் குறித்து சந்தேகம் எழுந்ததன் பேரில் காவல்துறை விசாரிக்க துவங்கியதில் மேற்கண்ட முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான 1.இசக்கி பாண்டியன், 2.ஆயன் நம்பியார், 3.ராஜகோபால், 4.பூபதி பெருமாள் பத்திர எழுத்தர் இடைகால், 5.முருகேச குமார், 6.சிவசக்தி, 7.ஆவண எழுத்தர் இராமகிருஷ்ணன் ஆகியோர் மீது 465,467,420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை டி.எஸ்.பி. ஜாகீர் உசேன் நேரடியாக விசாரித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.