அவர் மீதான வழக்கை விலக்கிக்கொள்ள செயலாக்கத் துறை முடிவு செய்ததன் பின்னணியில் இப்படிப் பேசுகிறாரா என்ற விமர்சனம் வரக்கூடும். நான் அப்படிச் சொல்ல விரும்பவில்லை. அது தொடர்பான கேள்வி வந்தவுடன் சட்டென்று அவர் பேட்டியை முடித்துக்கொண்டார்.
ஆனால் சிஏஏ-என்பிஆர்-என்ஆர்சி பற்றி பாஜக என்ன சொல்லி வந்திருக்கிறதோ அதையேதான் ரஜினி சொல்லியிருக்கிறார் என்று பார்க்கிறேன். இந்திய இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தலாக சிஏஏ-யில் எதுவும் இல்லை என்று அவர் சொல்லியிருப்பது சரிதான். அதாவது சட்டத்தில் நேரடியாக அப்படி இல்லை. அப்படி இருப்பதாகப் போராடுகிறவர்களும் சொல்லவில்லை. ஆனால் வெளிநாடுகளிலிருந்து அகதிகளாக வரும் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதை ஒப்புக்கொள்கிறாரா? அந்த மூன்று நாடுகளில் “மத ரீதியாகத் துன்புறுத்த பட்டவர்கள்.” என்ற ஒரு வரி சட்டத்தில் சேர்க்கப்பட்டதே செயற்கையானது, இந்திய அரசமைப்பு சாசனத்தின் அடிப்படையான மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கே எதிரானது. அந்த அடிப்படையையே தகர்க்க முயல்வது. அதை ரஜினி ஏற்கிறாரா? தொலைநோக்கில் இது இந்திய இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல இந்தியர்கள் எல்லோருக்குமே அச்சுறுத்தல்தான். ஆகவேதான் மக்கள் தன்னெழுச்சியாகப் போராடுகிறார்கள். அந்தப் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஆதரவாக நிற்கின்றன. அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்திற்காக சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்றால், சட்டத்தை ஆதரிக்கிற கட்சிகள் சுயலாபத்திற்காகத்தான் ஆதரிக்கின்றனவா? இவர் ஆரம்பிக்கப் போகிற கட்சியும் சுய லாபத்துக்காகத்தான் ஆதரிக்குமா? இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று கூறியிருக்கிறார். அதை வரவேற்கிறேன்.
ஆனாலும் அதை இரண்டு கோணங்களில் பார்க்கிறேன். ஒன்று, இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு நிலைப்பாடு எடுத்து தமிழகத்தில் இவர் தனது அரசியலைத் தொடங்க முடியாது. இரண்டாவது, அவர்களுக்கு குடியுரிமை கொடுப்பது குறித்து சிஏஏ மௌனமாக இருப்பதைப் போராடுகிறவர்கள் அனைவரும் சுட்டிக்காட்டி விமர்சித்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை தனது விருப்பம் என்றுதான் ரஜினி சொல்கிறாரே தவிர, சட்டத்தில் அவர்கள் கைவிடப்பட்டது பற்றி விமர்சிக்கத் தயாராக இல்லையே!
-குமரேசன்
You must be logged in to post a comment.