விவசாயிகளின் வாங்கும் சக்தியை உயர்த்துவதால் மட்டுமே இந்திய பொருளாதாரம் உயரும்-பி.ஆர்.பாண்டியன் பேட்டி.!

விவசாயிகளின் வாங்கும் சக்தியை உயர்த்துவதால் மட்டுமே இந்திய பொருளாதாரம் உயரும்-பி.ஆர்.பாண்டியன் பேட்டி.!

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்தார். அதில், விவசாயிகளின் வாங்கும் சக்தியை உயர்த்துவதால் மட்டுமே இந்திய பொருளாதாரம் உயரும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீத்தாராமன் முதல் தென் இந்திய பெண் நிதி அமைச்சராக பொறுப்பேற்று இரண்டாவது முறையாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதை அடுத்து விவசாயிகளின் மிகுந்த எதிர்பார்ப்போடு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடந்த 2012ம் ஆண்டு முதல் வறட்சி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் பேரழிவையும், தொடர்ந்து மகசூல் இழப்பையும் சந்தித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பிலிருத்து மீளாத் துயரத்தில் உள்ளனர்.

உற்பத்தி பாதிக்கப்பட்டதால் வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மறு கடன் பெற முடியாத நிலையில் உள்ளனர். இதனை உணர்ந்து கடன் முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்திட வேண்டும். நிபந்தனையின்றி மறு கடன் பெறுவதற்கான தகுதியை உருவாக்க வேண்டும்.

வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கான கடன் வழங்குவதற்கான இலக்கு நிர்ணயிப்பதை மத்திய அரசு கைவிட்டு கடன் கொடுப்பதற்கு என்று நபார்டு வங்கி மூலம் தனி நிதியகம் உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.

நபார்டு வங்கிக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியை கொண்டு சாலை ,பாலம் அமைப்பதையும், மருத்துவமனை, கல்வி கூடங்களுக்கான கட்டிடங்கள் கட்டுவதற்கு பெரும் பகுதி நிதி பயன்படுத்துவதை கைவிட வேண்டும். நிதி முழுமையும் விவசாய வளர்ச்சிக்கு பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும்.

4% வட்டியில் கடன் கொடுப்பதை கட்டாயமாக்கிட வேண்டும்.விவசாய உற்பத்தி பொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் அதில் 50%த்தை சேர்த்து லாபகரமான விலை நிர்ணயம் செய்வதை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்.

பயிர் காப்பீடு திட்டத்தில் தனியார் காப்பீடு நிறுவனங்கள் அனுமதிப்பதை கைவிட வேண்டும். உற்பத்திக்கான மூலப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை முழுவதுமாக கைவிட வேண்டும்.

விற்பனைக்கான உரிய சந்தையை ஏற்படுத்தி அரசே கொள்முதல் செய்வதை உறுதிப் படுத்த வேண்டும். ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகள் உள்நாட்டு சிறு குறு விவசாயிகளின் உற்பத்தியை கணக்கில் கொண்டு அதற்கேற்ப சுழற்சி முறையில் வரைமுறை செய்து அதற்கான முழுப் பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும்.

உலக பெரும் முதலாளிகள் விவசாயத்தில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும்.யூக பேர வணிகத்தை (ஆன்லைன் வர்த்தகத்தை) கைவிட வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலத்தடி நீர் செறிவூட்டல் சிறப்பு திட்டத்தில் தமிழகத்தையும் இணைத்திட வேண்டும். தென் மாநிலங்களுக்கிடையேயான நீர் பங்கீட்டு பிரச்சினை உடனுக்குடன் தீர்வு காணுவதை கட்டாயமாக்கிட வேண்டும். நதி நீர் பிரச்சினைகளில் அரசியல் தலையீடுகளை தடுத்து நிறுத்திடுவதோடு, அதற்க்கான தீர்வாய அமைப்புகள் தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட கொள்கை திட்டம் வகுத்திட வேண்டும்.

காவிரி டெல்டா போன்ற பெரும் விளை நிலப்பகுதிகளை மாற்று திட்டங்களுக்கு பயன்படுத்துவதை தடுத்து நிறுத்தி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திட வேண்டும்.

இந்தியாவில் வாழும் மக்கள் தொகையில் 80% பேர் விவசாயிகளாகவும், அதனை வாழ்வாதாரமாக கொண்டும் உள்ளனர். எனவே விவசாய உற்பத்தியை பல மடங்கு பெருக்குவதின் மூலம் அவர்களின் வாங்கும் சக்தியை உயர்த்தினால் மட்டுமே இந்திய பொருளாதாரத்தை உயர்த்திட முடியும். அதற்கான வகையில் தற்போதைய பட்ஜெட் அமைய வேண்டுமென விவசாயிகள் சார்பில் வலியுறுத்துகிறேன் என்றார். மேற்கண்டவாறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். அப்போது மாநில துணை செயலாளர் எம்.செந்தில்குமார் உடன் இருந்தர். செய்தி தொடர்பாளர் என்.மணிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..