இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலை சுற்றியுள்ள உணவகங்கள், தேனீர் கடைகளில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் லிங்கவேல், ஜெயராஜ் ஆகியோர் ராமேஸ்வரத்தில் உள்ள உணவகங்கள், தேநீர் கடைகள், பெட்டி கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இராமேஸ்வரம் நடுத்தெருவில் உள்ள தேநீர் கடையில் பயன்படுத்திய டீ தூளை திடீரென சோதனை செய்தபோது, அதில் கலப்படம் இருப்பதை கண்டறிந்த அதிகாரிகள் அங்கிருந்த டீ தூள் பாக்கெட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். இதனை தொடர்ந்து சல்லிமலை பகுதியில் ஒரு வீட்டில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த போதை பாக்கு, பிளாஸ்டிக் டீ கப்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். பறிமுதல் செய்த பொருட்களை நகராட்சி பணியாளர்கள் மூலம் அழித்தனர். மேலும், இது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் தொடர்ந்து விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர். ஒரு கிலோ டீ தூளில் சில மில்லி கிராம் மட்டுமே செயற்கை நிறமூட்டிகளை சேர்க்க வேண்டும் என விதிமுறை உள்ளது.
குறிப்பிட்ட டீ தூளின் மாதிரியை உணவுப் சோதனைக்காக அனுப்பி உள்ளோம். டீ தூளில் அளவுக்கு அதிகமான நிறமூட்டிகள் சேர்க்கப்பட்டிருந்தால் குறிப்பிட்ட நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லிங்கவேல் தெரிவித்தனர்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட நிறமூட்டிகளை சேர்ப்பதால் புற்றுநோய், நரம்பு சார்ந்த பிரச்னைகள், இதய செயல்பாட்டில் பிரச்னை ஏற்படும் என தெரிந்தும் தேனீர் கடைகளில் இவ்வறான கலப்பட டீ தூள் பயன்படுத்துவது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயனிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
You must be logged in to post a comment.