திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகனை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினசரி வந்து செல்கிறார்கள். இவர்களில் வயதானவர்களும் மாற்றுத்திறனாளிகளும் அடக்கம். இவ்வாறு வருகைதரும் பக்தர்களில் பலர் ரயில் மூலமாக பயணம் செய்யவே விரும்புகின்றனர். இந்நிலையில் பழனி ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வந்து செல்ல ஏதுவாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் இல்லாததால் மிகப்பெரிய இன்னல்களை சந்திக்க வேண்டி வந்தது. இப்பிரச்சனை தொடர்பாக மதுரை மண்டல பொது மேலாளர் அவர்களிடம் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னதாக மனு அளித்தும் நடவடிக்கை இல்லாத காரணத்தால் கடந்த 05.11.19 அன்று காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை பழனி ரயில் நிலையத்தின் முன்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
போராட்ட அறிவிப்பின் பலனாக பேச்சுவார்த்தைக்கு அழைத்த ரயில்வே நிர்வாக அதிகாரிகள் விரைவாக பணிகளை முடிப்பதாக எழுத்துப் பூர்வமாக உறுதிமொழி அளித்தனர் வாக்குறுதி அளித்தபடி வேலையை துவங்கிய ரயில்வே நிர்வாகம் வேலையை நிறைவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். எப்பொழுது தொலைபேசியில் இது தொடர்பான அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டாலும் பல்வேறு காரணங்களை கூறி இன்னும் ஒரு வார காலத்திற்குள் பணிகளை முடித்துவிடுவோம் என பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார்கள். தற்போது பழனியில் தைப்பூச திருவிழா துவங்க உள்ளதால் கூட்டம் அதிகமாக வர வாய்ப்புள்ளது. எனவே, உடனடியாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து கட்டுமான வேலைகளையும் முடிக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் இம்மாத இறுதியில் மீண்டும் எங்களது சங்கத்தின் சார்பில் பழனி ரயில் நிலையத்தின் முன்பாக போராட்டம் நடத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், பழனி நகர்க்குழு சார்பில் S.மாலதி – நகர தலைவர் P.தங்கவேல் – நகர செயலாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.