புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணி அளவில் துவங்கியது. டோக்கன் பெறாமல் 100க்கும் மேற்பட்ட காளைகளை பங்கேற்க கொண்டு வந்ததால் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காளைகளை அடக்குவதற்காக ஏராளமான மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டனர்.சீறிவரும் காளைகளை வீரர்கள் வீரத்துடன் அடக்கி வருகின்றனர்.ஜல்லிக்கட்டு போட்டியை வெளிநாட்டினர்,மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் வந்த பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகிறார்கள்.
உயர்நீதிமன்ற ஆணையின்படி ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் மேற்பார்வையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய், தென்மண்டல காவல்துறை ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன், மற்றும் மதுரை மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் ஆகியோர் தலைமையில், 1000,க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பில் உள்ளனர்.கால்நடைகளுக்கான மருத்துவ பரிசோதனை மையத்தில் ஜல்லிக்கட்டு காளை முழு உடல் தகுதி பெற்றுள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது.மேலும் காளைகளின் கொம்புகள் கூர்மையாக இருந்தால் அது மழுங்கடிக்கப்படும் என்று கால்நடைத்துறை இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர் கூறினார்.இதனையடுத்து ஜல்லிக்கட்டு காளைகளுடன் டோக்கன் இல்லாமல் அனுமதியின்றி நுழைய முயன்றவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்
You must be logged in to post a comment.