மாநில அளவிலான வாலிபால் போட்டி திருவாரூர், கடலூர் அணிகள் கோப்பை வென்றன.

ஊரகப்பகுதிகளில் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் ஓஎன்ஜிசி நிறுவனம் பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்ட வாலிபால் சங்கத்துடன் இணைந்து ஓஎன்ஜிசி காவிரி கோப்பைக்கான 6 ஆம் ஆண்டு மாநில அளவிலான போட்டி ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஜன.10, 11, 12 தேதிகளில் நடந்தது. இதில் அரியலூர், கடலூர், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகபட்டினம் அணிகள் பங்கேற்றன. மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 27: 25, 18:25, 25:22 என்ற செட் கணக்கில் ராமநாதபுரம் அணியை, கடலூர் அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. அரியலூர், புதுக்கோட்டை அணிகள் 3, 4 ம் இடம் பிடித்தன.

கடலூர் சுவாதி, சரண்யா, ராமநாதபுரம் செல்வபாரதி ஆகியோருக்கு சிறந்த வீராங்கனைக்கான தனி நபர் கோப்பை வழங்கப்பட்டது. ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில் திருவாரூர், புதுக்கோட்டை அணிகள் மோதின. இதில் திருவாரூர் வென்றது. ராமநாதபுரம், கடலூர் அணிகள் 3, 4 ம் இடம் பிடித்தன. பரிசளிப்பு விழாவிற்கு டாக்டர் அரவிந்தராஜ் தலைமை வகித்தார். போட்டியில் வென்ற அணிகளுக்கு , ராமநாதபுரம் வாலிபால் சங்கத் தலைவர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை வழங்கினார். செயலர் எம்.சோமசுந்தரம், பொருளாளர் யூசுப் கனி, இணை செயலர்கள் ரமேஷ் பாபு, தமிழரசு, ராமநாதபுரம் மாவட்ட உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க செயலர் எம்.ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..