தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) திண்டுக்கல் மாவட்டக்குழுவின் சார்பில் 08.01.2020 காலை ஆத்தூர் தாலுகா செம்பட்டி பேருந்து நிலையம் முன்பாக மத்திய பா.ஜ.க அரசின் மாற்றுத்திறனாளிகள் விரோத போக்கை கண்டித்து மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது.TATRATDAC-சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகவள்ளி (ஆத்தூர்), கந்தசாமி (ரெட்டியார்சத்திரம்), பஞ்சு (நிலக்கோட்டை) முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் காளீஸ்வரி மற்றும் உயரம் தடைபட்டோர் மாநில செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் மறியலை விளக்கி சிறப்புரையாற்றினர்.
ஆத்தூர், நிலக்கோட்டை, ரெட்டியார்சத்திரம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இப்போராட்டத்தில் மத்திய பா.ஜ.க அரசிற்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியலை ஒட்டி அங்கு குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்ப்பட்ட காவல்துறையினர் மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் கைது செய்து செம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் சிறைவைத்தனர்.
இப்போராட்டத்தில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தாங்கள் படுகின்ற பல சிரமங்களை குறிப்பாக மாதாந்திர உதவித்தொகையை 3000 ஆக உயர்த்துவது, நூறுநாள் வேலையை 200 நாட்களாக அதிகரிப்பது, நூறுநாள் வேலையை பேரூராட்சிக்கும் விஸ்தரிப்பது, ரயில்களில் மாற்றுத் திறனாளிகளிக்கான பெட்டிகளை இணைப்பது, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதால் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை பறிக்கப்படுவது, அனைத்து தனியார் மற்றும் அரசு கட்டிடங்கள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்ல ஏதுவாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைப்பது, வெஸ்டர்ன் கழிப்பறை வசதி ஏற்ப்படுத்துவது, மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டத்தை அமல்படுத்துவது, பல்நோக்கு அடையாள அட்டையை அனைவருக்கும் உடனடியாக வழங்குவதோடு அனைத்து இடங்களிலும் உடனடியாக அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும்,மத்திய அரசுக்கு எதிராகவும் மாற்றுத்திறனாளிகள் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.