குடியுரிமை சட்டத்தை எதிர்த்து யஷ்வந்த் சின்கா 3000 கி.மீ.,யாத்திரை.!

குடியுரிமைதிருத்த சட்டத்தை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று (ஜன.,09) துவங்கி, மும்பை முதல் டில்லி வரை 3000 கி.மீ., யாத்திரை செல்ல உள்ளார்.

“காந்தி சாந்தி யாத்திரை” என பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரை மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உ.பி., மற்றும் அரியானா ஆகிய 5 மாநிலங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இன்று துவங்கும் இந்த யாத்திரை மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட தினமான ஜன.,30 அன்று டில்லி ராஜ்காட்டில் முடிவடைய உள்ளது. தேசியவாத காங்., கட்சியின் தலைவர் சரத் பவார், தெற்கு மும்பையில் இந்த யாத்திரையை கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். இந்த யாத்திரையில் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க உள்ளதாக யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், டில்லி ஜே.என்.யு., வன்முறை தாக்குதலுக்கு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப்படாது என பார்லி.,யில் உறுதி அளிக்க வேண்டும் என்ற 3 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த யாத்திரை செல்லப்படுவதாக கூறப்படுகிறது. யஷ்வந்த் சின்காவுடன், மஹா., முன்னாள் முதல்வர் ப்ருத்விராஜ் சவ்கான், முன்னாள் எம்.பி., சத்ருகன் சின்கா, விதர்பா காங்., தலைவர் ஆசிஷ் தேஷ்முக் ஆகியோரும் யாத்திரை செல்ல உள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..