2020ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்ற முதல் கூட்டம் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து ஆளுநர் உரையோடுதான் தொடங்கப்படும். அதன்படி பன்வாரிலால் புரோகித் உரையுடன் இன்று தொடங்கியது. வழக்கம்போல் ஆளுநர் உரையைப் புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது. இந்த முறை திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்ததற்கு அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறிய காரணங்கள் கீழ்க்கண்டவாறு:
ஆளுநர் உரையைப் புறக்கணித்து திமுக சார்பில் நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம். தமிழ்நாட்டின் கடன் தொகை ரூ. 4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தொழில் வளர்ச்சி இல்லை.
புதிய வேலை வாய்ப்புகளும் இல்லை. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் பதிலளிக்கவில்லை.
நாட்டின் மதச்சார்பின்மையைச் சிதைக்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்துள்ளது. இதனால் சட்டம் நிறைவேறியுள்ளது. இதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளது.
நடந்து முடிந்து உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் அதிகாரிகளும், காவல் துறையும் அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளது.
சமீபத்தில் புதுக்கோட்டையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அதிகாரி ஒருவரை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னையில் அக்கட்சி நிர்வாகிகள் ஒருமையில் பேசிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நீட் விவகாரத்தில் இப்போது மேல் முறையீட்டு மனுவை நீதிமன்றத்தில் போட்டுள்ளது. அனிதா உள்ளிட்ட 7 மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் அதிமுக தொடர்ந்து நாடகங்களை அரங்கேற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், முதல்வர் பழனிசாமி எழுதிக் கொடுத்த சுயபுராணத்தை ஆளுநர் வாசித்திருக்கிறார் என மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆளுநர் உரையின் 56பக்கத்தையும் திருப்பிப் பார்த்தேன், சொல்வதற்கு உருப்படியாக ஒன்றுமில்லை.இது ஆளுநர் உரையல்ல, ஆளும்கட்சியின் உரை, நல்ல நகைச்சுவை உரை என்றும் கூறியுள்ளார். பேரவையையும் நாடக மேடை ஆக்குவதை நிறுத்துங்கள் எனவும் கூறியுள்ளார்.
You must be logged in to post a comment.