குழந்தைகள் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தல், பரப்புதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து, தமிழக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே திருச்சியில் கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களின் பட்டியலை தயாரித்து, அதனை பல்வேறு மாவட்டங்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு, அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், முகநூலில் குழந்தைகள் ஆபாச படங்களை அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரெந்தா பசுமத்ரி என்ற 23 வயது இளைஞர் பதிவிட்டது தெரியவந்தது. இதை கண்காணித்த போலீசார், அவர் குறித்து விசாரணை நடத்தியபோது, பொள்ளாச்சியில் தங்கி டைல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததை கண்டறிந்தனர்.
அவரைப் பிடித்து, செல்போனை ஆய்வு செய்தபோது, குழந்தைகள் ஆபாச படங்கள் அதிகமாக இருந்ததும், அந்த ஆபாச படங்களை ஃபேஸ்புக் மெசேஞ்சர் மூலமாக நண்பர்களுக்கு அனுப்பி வைத்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் அந்த இளைஞரின் சமூக வலைதள கணக்கை முடக்கியதோடு, ரெந்தா பசுமத்ரி மீது போக்சோ சட்டத்தின்கீழும் வழக்குப் பதிவு செய்தனர்.
You must be logged in to post a comment.