திருவண்ணாமலை ஒன்றியத்தில் டிச 27 அன்று நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வாக்குகள், இன்று (வியாழன்) திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் எண்ணப்படுகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையின் போது, வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை அரங்கத்திற்குள் செல்வதற்கு அனுமதி அட்டைகள் வழங்கப்படாமல் இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக வேட்பாளர்களும்,முகவர்களும் திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குவிந்தனர். ஆனால் யாருக்கும் அனுமதி அட்டை வழங்கப்படவில்லை. அதிகாரிகள் அனுமதி அட்டையை தயார் செய்யாத நிலை இருந்ததால், தொடர்ந்து 2 நாட்களாக முகவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். அனுமதி அட்டை வழங்க கோரியும் புதனன்று மாலை வரை வழங்கப்படாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் அனுமதி அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.
You must be logged in to post a comment.