முகவை கல்வி & மேம்பாட்டு அறக்கட்டளை (MEET) மற்றும் எம்பவர் இந்தியா ஃபவுண்டேசன் இணைந்து நடத்திய TNPSC இலவச பயிற்சி முகாம் துவக்க விழா 14/12/2019 அன்று கிரசன்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி, ராமநாதபுரத்தில் நடைபெற்றது.
இந்த துவக்க விழா முகவை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளையின் தலைவர் செய்யது முஹம்மது இப்றாஹிம் தலைமையில் நடைபெற்றது. இன்ஜினியர் ஹமீத் சாலிஹ் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். பெரிய முஹல்லா ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
எம்பவர் இந்தியா ஃபவுண்டேசன் நிர்வாகி முகமது ஜுனைத் அரசுப்பணிகளில் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களை அதிக அளவு பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில்தான் இந்தப் பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளதாகவும், இங்கு அனைத்து சமூகத்தினை சேர்ந்த தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் இலவசமாக பயிற்சி பெற்றுக் கொள்ளலாம் என்றும் சிறப்புரை ஆற்றினார்.
மேலும் பல் மருத்துவர் Dr.ஜெமிலு நிஷா கல்வி குறித்து விழிப்புணர்வையும், கிராம நிர்வாக அதிகாரி VAO முகம்மது ஆசிக் TNPSC தேர்வை குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்கள். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள், தனியார் துறையில் வேலை பார்க்கும் நபர்கள் போன்றோரின் வசதிக்காக இந்த பயிற்சி மையம் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நடைபெறுவதாகவும், TNPSC மற்றும் UPSC பற்றிய விழிப்புணர்வை கல்லூரி மற்றும் பள்ளியில் பயிலும் காலங்களிலேயே மாணவர்களுக்கு ஏற்படுத்துவது எங்கள் பிரதான நோக்கம் என்பதாக முகவை எஜுகேஷன் & எம்பவர்மெண்ட் டிரஸ்ட் (MEET) நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் இந்த விழாவில் திரளாக கலந்துகொண்டனர். இந்த விழாவின் நிறைவாக பயிற்சியாளர் Er.அக்பர் அலி மாணவர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தினார். என்பவர் இந்தியா ஃபவுண்டேசன் நிர்வாகி முஹம்மது இப்ராஹிம் நன்றியுரை வழங்கினார்.
சமூக பொறுப்புள்ள மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வமுள்ள இளம் தலைமுறையினர் இதன் வாயிலாக நமது மாவட்டத்தில் இருந்து உருவாகி அரசுப் பணிகளில் பங்குபெற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பிற்கு அனைத்து பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
You must be logged in to post a comment.