மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் கடந்த 2012-ம் ஆண்டு கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.நாடு முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்திய இச் சம்பவத்தில் ராம்சிங், மகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்தர் தாக்கூர் மற்றும் 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.சிறுவனுக்கு சிறார் நீதி சட்டப்படி அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மற்ற நான்கு பேருக்கும் விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதை டில்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உறுதி செய்தன.இந்நிலையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற டில்லி திகார் சிறையில் ஆள் இல்லை என தகவல் வெளியானது.இப்பணிக்கு தயார் என ராமநாதபுரம் போலீஸ் ஏட்டு சுபாஷ் சீனிவாசன், 42 தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திகார் சிறை தலைமை இயக்குநருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். ராமநாதபுரம் மாவட்ட காவல் பணியிடை பயிற்சி மையத்தில் தலைமை காவலராக சுபாஷ் சீனிவாசன் பணியாற்றுகிறார். திகார் சிறை அதிகாரிகளுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற 4 பேரை தூக்கிலிட திகார் சிறையில் ஆள் இல்லை என்பதால், தண்டனை தள்ளிப்போவதாக செய்தி பரவி வருகிறது.சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அப்பணியை செய்ய விருப்பம் தெரிவிக்கிறேன். இவ்வாறு அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுபாஷ் சீனிவாசன், தேவிபட்டினத்தில் பணியாற்றியபோது, அனாதை உடல் சளை அடக்கம் செய்வது, மனநலம் பாதித்தோருக்கு உதவுவது போன்ற சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார்.தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதாவிடம் அண்ணா பதக்கம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் விருதுகள் பெற்றுள்ளார்.
7
You must be logged in to post a comment.