இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிக கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வருகிறது. மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை செயல்பட்டு மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறது. மழைநீர் வடிந்திடவும், நிலத்தடி நீர் உயர்ந்திடவும், விவசாயிகள் மழை நீரை பயன்படுத்திடும் வகையில் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளுக்கு அருகில் உள்ள கண்மாய், குளம், குட்டைகளில் மழைநீரை நிரப்பும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏர்வாடி ஊராட்சி சடைமுனியன்வலசை கிராமத்தில் மழைநீர் சூழ்ந்த பகுதிகள், வீடுகள், கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் கனமழை காரணமாக சுவர் விழுந்து சேதமடைந்த வீட்டை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் எடுக்கப்படும் என அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார். கனமழை காரணமாக ஏற்படும் எத்தகைய இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ளும் விதமாக அரசுத்துறை அலுவலர்கள் இரவு ,பகல் பாராமல் பணியாற்ற தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர்கள் பொ.முத்துக்குமார் (கடலாடி), பூ.வீரராஜ் (கீழக்கரை), வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புக்கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.