உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு.!

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு.!

உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு மறுவரையறையை முழுமையாக முடிக்க உத்தரவிடக் கோரி திமுக மற்றும் செ.கு. தமிழரசன் உள்ளிட்ட 12 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது.

திமுக சார்பில் ஆஜரான அபிஷேக் மனு சிங்வி, வார்டு மறுவரையறை பணிகள் முடிவடையாமல், தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய மாவட்டங்களுக்கான வார்டு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு பணிகள் முடிவடையவில்லை என்றும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் நரசிம்மா, வார்டு மறுவரையறை பணி முடிவடைந்து விட்டதாக தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மறுவரையறை பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாகவும் அவர் கூறினார். அப்போது மாவட்டங்கள் பிரிக்கப்பட்டால், மறுவரையறை செய்ய வேண்டாமா என தலைமை நீதிபதி கேள்வி எழுப்ப, அதற்கான அவசியமில்லை என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நரசிம்மா தெரிவித்தார்.

மக்கள் கோரிக்கை அடிப்படையிலேயே மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த தமிழக அரசின் சார்பில் ஆஜரான முகுல் ரோகத்கி 9 புதிய மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்கலாம் என்றார். புதிய மாவட்டங்களில் மறுவரையறை முடியாத நிலையில் தேர்தல் நடத்தினால் குழப்பம் வராதா என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் போது வார்டு மறுவரையறை அவசியம் என்றார்.

மறுவரையறை முடியாமல் தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டது ஏன்? சட்ட நடைமுறைகளை கடைபிடிக்காதது ஏன்? என்று தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, சட்டத்தை மதித்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். நாடாளுமன்றம் என்ன விதிகளை வகுத்துள்ளதோ, அதன்படியே உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என்றும், குறுக்கு வழியில் உள்ளாட்சித்தேர்தலை நடத்தக்கூடாது என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

அப்போது தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்த பின் எந்த நீதிமன்றத்தாலும் தேர்தலை தள்ளிப்போட முடியாது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள், தேர்தலை ரத்து செய்ய முடியாது ஆனால் விதிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால், தேர்தலை தங்களால் நிறுத்தி வைக்க முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் 9 மாவட்டங்களுக்கான தேர்தலை தள்ளி வைக்கமுடியுமா என்பது குறித்தும், பிரிக்கப்பட்ட மாவட்டங்களை கருத்தில் கொள்ளாமல் பழைய மாவட்டங்களின் அடிப்படையில் தேர்தலை நடத்த முடியுமா என்பது குறித்தும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..