வருமோ வராதோ என்றிருந்த உள்ளாட்சித் தேர்தல் இன்று ‘வரும் ஆனால் வராது’ என்ற நிலைக்கு வந்திருக்கிறதா?

வருமோ வராதோ என்றிருந்த உள்ளாட்சித் தேர்தல் இன்று ‘வரும் ஆனால் வராது’ என்ற நிலைக்கு வந்திருக்கிறதா?

உண்மையிலேயே உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் அஇஅதிமுக அரசுக்கு அக்கறை இருக்கிறது என்றால், தொடக்கத்திலிருந்தே எதிர்க்கட்சிகளுக்கு அவகாசம் தராதது, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு செய்யாதது, வாக்காளர் பட்டியல் மறுவரை செய்யாதது, தொகுதி மறுவரை செய்யாமல் புதிய மாவட்டங்கள் அறிவிப்பது, நகராட்சிகள் – மாநகராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்காதது, நகராட்சித் தலைவர், மேயர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என்று ஏன் ஒவ்வொரு அறிவிப்பிலும் இத்தனை குளறுபடிகள்?

மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் ஒரு கட்சியாகவும், தலைவர் அல்லது மேயர் வேறு கட்சியாகவும் இருந்துவிட்டால் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஒத்துழைப்புக் கிடைக்காது. ஆகவேதான் அந்தப் பிரதிநிகளால் தேர்ந்தெடுக்கப்படும் மறைமுகத் தேர்தல் எனறு விளக்கம் அளிக்கப்படுகிறது. உண்மையிலேயே அவ்வாறு நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை, முடக்கப்படுகின்றன என்றால் அதை மக்களிடம் கொண்டுசெல்லலாமே?

மூன்றாண்டுகளாக மக்களின் உள்ளாட்சி உரிமை மறுக்கப்பட்டுள்ள நிலையில் குளறுபடியற்ற தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிட முடியவில்லையா?

தீர்ப்பைத் தள்ளிவைத்த உச்சநீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை மறுபடியும் நிறுத்த முடியும் என்று கடுமையாகக் கூறியுள்ளது. இதைத்தான் ஆளுங்கட்சி எதிர்பார்க்கிறதா?

இவையெல்லாம் சிறிய குறைபாடுகள்தானா என்பது ஒருபுறமிருக்க, இந்தக் குறைபாடுகளோடு தேர்தலை நடத்தவிட்டுவிட்டு, பிறகு சரிசெய்ய முடியாதா? முழுமையாக சரி செய்யாமல் மொத்தத் தேர்தலையும் நடத்தக்கூடாது என்று திமுக நீதிமன்றத்தை நாடுவது சரியா?

இந்தக் குளறுபடிகளால் மக்களின் உரிமை பாதிக்கப்படுகிறது, ஜனநாயக வாய்ப்பு மறுக்கப்படுகிறது, முறையான நிர்வாக ஏற்பாடு தடுக்கப்படுகிறது என்றால், ஒரு எதிர்க்கட்சி இந்தக் குறைபாடுகள் அப்படியே தொடரட்டும் என்று கண்டுகொள்ளாமல் இருக்க முடியுமா?

விவாதங்களின் பங்கேற்கும் ஆளுங்கட்சியினர், தேர்தல் அறிவிப்பு வந்தால் வழக்குத் தொடுக்க மாட்டோம் என்று திமுக அறிவிக்கத் தயாரா என்று கேட்பது வழக்கம். அப்படியானால் தெரிந்தேதான் குளறுபடிகளுடன் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றனவா?

ஊரக உள்ளாட்சிகளுக்கு ஒருங்கிணைந்த சட்டப் பாதுகாப்பு இருப்பது போல நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு ஒருங்கிணைந்த சட்ட ஏற்பாடு இல்லை. இனிமேலாவது அப்படியான சட்டம் நிறைவேற்றப்படுமா?

மக்கள் மன்றங்களாகிய உள்ளாட்சிகள்தான் உண்மையிலேயே அதிகாரம் படைத்தவையாக இருக்க வேண்டும். ஆனால் இங்கே அந்த மக்கள் மன்றங்களை உறுதிப்படுத்தவே வழக்கு மன்றங்களின் கதவைத் தட்ட வேண்டியிருப்பது ஆரோக்கியமானதுதானா?

ஆட்சிக்கு வருகிறவர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப தேர்தல் நடைமுறைகளை மாற்றிக்கொள்ள முடியும் என்ற நிலைமைக்கு முடிவு கட்ட உறுதியான சட்டத் திருத்தம் தேவைப்படவில்லையா?

அ.குமரேசன் மூத்த பத்திரிகையாளர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..