வேலூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட பெண் கனடா நாட்டு மாந்திரியாக பதவியேற்பு

கனடா மந்திரிசபையில் முதல் முறையாக தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர் பொது சேவை மற்றும் கொள்முதல் துறை மந்திரியாக தேர்வாகியுள்ளார்.கனடாவில் 338 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 21-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கும், ஆண்ட்ரூ ஸ்கீர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களில் வெற்றி பெற்றது. கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்தது. தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் ட்ரூடோ தனது புதிய மந்திரிசபையை அமைத்து மந்திரிகளை நியமனம் செய்தார்.

இந்த மந்திரிசபையில் வேலூரைச் சேர்ந்த அனிதா ஆனந்த் என்ற பெண் இடம் பெற்றுள்ளார். இவர் லிபரல் கட்சி சார்பில் ஆன்டாரியா மாகாணத்தின் ஓக்வில்லே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் இவர் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை மந்திரி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கனடாவில் ஒரு இந்துப் பெண் எம்.பி. மந்திரியாக தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும்.கனடாவில் நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் கென்ட்வில்லே நகரில் 1967-ம் ஆண்டு பிறந்த அனிதா ஆனந்த், முதுநிலை சட்டப்படிப்பு படித்து அங்குள்ள டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பேராசிரியையாக பணியாற்றியவர் ஆவார். 4 குழந்தைகளின் தாயாகிய அனிதா கனடா எம்பியாக தேர்வு ஆகி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அனிதா ஆனந்திற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..