திருப்புல்லாணி அரசுப்பள்ளியில் ‘ பாரம்பரியம்’ புகைப்படக் கண்காட்சி

நமது பண்பாடு மற்றும் பாரம்பரிய சின்னங்களை பற்றி தெரிந்துகொண்டு  பாதுகாக்கும் மனப்பான்மையை மாணவர்கள், இளையோர் உள்ளிட்ட பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலக பாரம்பரிய வார விழா கொண்டாடப்படுகிறது.இவ்விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் ‘ராமநாதபுரம் மாவட்ட பாரம்பரியம்’ புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. மன்ற செயலாளர் வே.ராஜகுரு தலைமை தாங்கினார். 9-ம் வகுப்பு மாணவர் ச.கிருஷ்ணராஜன் வரவேற்றார்.உதவி தலைமை ஆசிரியர் இ.சண்முகநாதன் தொடங்கி வைத்தார்.மாவட்டத்தில் புதிதாக கண்டெடுத்த புதிய, பழைய, கற்கால கருவிகள், சூலக்கல், திருவாழிக்கல், காசுகள், நவகண்டம், எல்லீஸ் கல்லறை கல்வெட்டு, கழுமரம், திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, இராமேஸ்வரம் உள்ளிட்ட கோயில்கள், பறவைகள் சரணாலயங்கள், பாரம்பரிய தாவரங்கள், பொந்தன்புளி  மரம்,  காரங்காடு சூழியல் பூங்கா, அரியமான், மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தில் உள்ள கடற்பசு உள்ளிட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள், கமுதி, இராமநாதபுரம், திருப்புல்லாணி  கோட்டைகள், அரண்மனைகள், ஓரியூர், ராமநாதபுரத்தில் உள்ள தேவாலயங்கள், ஏர்வாடி தர்கா, நரிப்பையூர் முஸ்லிம் பள்ளிவாசல்,  பௌத்தம், சமண மதத் தடயங்கள் ஆகியவற்றின் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் இடம் பெற்றிருந்தன.7-ம் வகுப்பு மாணவர்கள் த.ஹில்மியா ஹபீபா, அ.ஜெயஎல்சியா, செ.சாலினி, வி.பத்மபிரியா, மு.ஜெயரஞ்சனி, பு.திவ்யபாரணி, ப.நூருல் பர்கானா,  தே.டேவிட் லிவிங்டன், நா.அபிஷேக், வை.வைநவின் ஆகியோர்  கண்காட்சியில் இடம் பெற்ற புகைப்படங்களின் தகவல்களை விளக்கி கூறினார். 9-ம் வகுப்பு மாணவர் த.முகமது பாசில் நன்றி கூறினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..