திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் புகைப்பிடித்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என மாநகரட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் புகைப்பிடிப்பதைத் தடுக்கும் பொருட்டு “சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலை தடைச்சட்டம் 2003-ன்படி பிரிவு (4)-ன் கீழ் பொது இடங்களில் புகைப்பிடிப்பவா்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும். இதேபோல் பிரிவு 6(ஏ)-ன்படி 18 வயதிற்கு கீழ் உள்ளவா்களுக்கு புகையிலை மற்றும் சிகரெட் விற்பது கண்டறியப்பட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். பிரிவு 6(பி)-ன் கீழ் பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் அமைந்துள்ள 100 மீ. சுற்றளவில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.இந்த நடவடிக்கையானது புதன்கிழமை (நவ.20) இன்று முதல் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இவற்றைக் கண்காணிக்கும் பொருட்டு மாநகராட்சி அலுவலா்கள் கொண்ட “சிறப்பு கண்காணிப்புக்குழு” அமைக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.