தந்தை இறந்த சோகம் தற்கொலைக்கு முயன்ற மாணவன். சாமர்த்தியத்தால் மீட்ட நண்பன்.. எஸ்.பி., பாராட்டு…

தந்தை இறந்த சோகத்தால் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற 13 வயது நண்பனின் உயிரை சாமர்த்தியத்தால் காப்பாற்றிய ஒத்த வயது சிறுவன்.ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் அருகே கருங்குளத்தில் கமுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு எட்டாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவரின் தந்தை, உடல் நலக் குறைவால் சமீபத்தில் இறந்தார்.தந்தை இறந்த சோகம் தாளாத, அந்த மாணவன் நவ.11 காலை பள்ளி சென்றார். வகுப்பறையிலும், தொடர்ந்து சோகத்துடன் காணப்பட்டார். அந்த மாணவர் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதை சக மாணவர் வடிவேலன் பார்த்து விட்டார்.உடனே மரத்தின் அருகே ஓடிச் சென்ற வடிவேலன், தூக்கில் தொங்கிய தனது நண்பனை தன் தோளில் தாங்கியவாறு அருகில் இருந்தோரை உதவிக்கு அழைத்தார்.வடிவேலனின் கூச்சலை கேட்டு ஓடி வந்தவர்கள் தூக்கில் தொங்கிய அந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை அனுப்பினர்.இது பற்றி தகவலறிந்த இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார், வகுப்பு தோழனை தன் சாமர்த்தியத்தால் காப்பாற்றிய வடிவேலனை தன் அலுவலகம் அழைத்து வரச் செய்தார். பெற்றோருடன் அங்கு வந்த வடிவேலனை பாராட்டி சான்றிதழ், தன்னம்பிக்கை புத்தகம் வழங்கினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..