இராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறை சார்பாக பரமக்குடியில் நடந்த விழாவில் 400 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 75 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் தலா 8 கிராம் விலையில்லா தங்கம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் வழங்கினார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் என்.சதன்பிரபாகர், இராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறியதாவது:தமிழ்நாடு அரசு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை மூலம் பெண்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை 8,261 ஏழை பெண்கள் ரூ.51.19 கோடி மதிப்பில் நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் பெற்று பயனடைந்துள்ளனர்.
விழாவில் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 255 பட்டதாரி பெண்கள், 145 பட்டதாரி அல்லாத பெண்கள் என 400 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.1 கோடியே 63 லட்சத்து 7 ஆயிரம், ரூ.1.12 கோடி மதிப்பிலான தாலிக்குத் தங்கம்வழங்கப்படுகின்றன. மூன்றாம் பாலினத்தவர் 5 பேருக்கு சுயதொழில் தொடங்குவதற்காக தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்படுகிறைன.மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. பருவ மழை கால மழை நீரை சேமிக்க தமிழக முதல்வரின் உத்தரவின்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பில் 69 பொதுப்பணித்துறை கண்மாய்களிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ஊராட்சி அளவில் உள்ள 224 சிறுபாசன கண்மாய்கள், 988 ஊரணிகளில் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண் இயக்கப் பணிகள் திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.விழாவில், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) ஜெயந்தி, பார்த்திபனூர் வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் முத்தையா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேவுகப்பெருமாள், செந்தாமரைச்செல்வி உட்பட அரசு அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.