தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளிடக்கோரியும்,அரசை கண்டித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கருஞ்சட்டை அணியும் போராட்டத்தை ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து அதில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பல ஆண்டு காலமாக குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளர், தேவேந்திர குலத்தான், வாதிரியான் ஆகிய 7 சமுதாய உட்பிரிவுகளை ஒன்று சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என தமிழக அரசு அரசாணை வெளியிடக் கோரி போராடி வருகிறோம் என்றார்.
மேலும் இந்த பிரிவை பட்டியல் இனத்தில் இருந்து எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தை துவங்குகிறோம்.மேலும் ஊர்கள் தோறும் கருப்பு கொடி ஏற்றுவோம். இந்த அரசாணையை வெளியிடாவிட்டால் எங்களது போராட்டம் இன்னும் தீவிரப்படுத்தப்படும். தமிழக அரசு ஸ்தம்பிக்கும். இது மக்களுக்கான போராட்டம் என்பதால் இன்னும் வீரியப்படுத்தப்படும். தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மட்டுமல்லாமல் சமுதாய மக்கள் அனைவரும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பார்கள்.
இந்த கோரிக்கை தொடர்பாக விரைவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாக தெரிவித்தார்.நாங்கள் அ.தி.மு.க. உடன் கூட்டணியில் இருந்தாலும், எங்களது கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கடந்த நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலின் போது தேர்தலை புறக்கணித்து எங்களது எதிர்ப்பை தெரிவித்தோம்.வரும் உள்ளாட்சி தேர்தலில் த.ம.மு.க. போட்டியிடும். கூட்டணியா? அல்லது தனித்து போட்டியா? என்பது குறித்து தேர்தல் அறிவித்த உடன் பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்யப்படும். இவ்வாறு தமமுக தலைவர் ஜான்பாண்டியன் கூறினார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.