ஒரு கிலோ வெங்காயம் நூறு ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் மழையின் காரணமாக வெங்காயத்தின் விலை 50சதவீதம் உயர்ந்துள்ளது. விரைவில் ஒருகிலோ வெங்காயத்தின் விலை 100ரூபாயை தாண்டும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பெரிய வெங்காயம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் இருந்து கொண்டுவரப்படுகிறது.
தற்போது அந்த மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தமிழக சந்தைகளுக்கு பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்து வருகிறது, இதன்காரணமாக கடந்த சிலநாட்களுக்கு முன்பு ஒருகிலோ பெரிய வெங்காயம் 40ரூபாயில் இருந்து 50ரூபாய்வரையில் விற்பனை செய்யப்பட்டது, தற்போது வரத்து குறைவின் காரணமாக ஒருகிலோ பெரிய வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று திண்டுக்கல், திருச்சி பகுதிகளில் விளைவிக்கப்படும் சின்ன வெங்காயம் தொடர் மழை காரணமாக அழுகும் நிலையில் உள்ளது. இதனால் கடந்த வாரங்களில் 50 முதல் 60ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலை இன்று 90 ரூபாயாக உள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாள்தோறும் 60 லாரிகளில் வந்த வெங்காய மூட்டைகள் தற்போது தொடர் மழை காரணமாக 30லாரிகளில் மட்டுமே வருகிறது. இதனால் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. மேலும் தொடர்ந்து மழை நீடிக்கும் என்பதால் வெங்காயத்தின் விலை விரைவில் கிலோ 100ரூபாயை எட்டும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி வெங்காய கமிஷன் மண்டியில் விற்கப்படும் வெங்காய மூட்டை ஒன்றின் விலை 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. வரத்து குறைந்ததால் 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயம் தற்போது 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 10 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் 40 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. இதனால் இருப்பு வைத்திருந்த வெங்காய விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
You must be logged in to post a comment.