இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 112 வது பிறந்த நாள் மற்றும் 57-வது குருபூஜை விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தென் மண்டல காவல் துறை தலைவர் சண்முக ராஜேஸ்வரன் ஆகியோர் பசும்பொன்னில் ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினர். இந்த ஆய்வை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தெரிவித்ததாவது :கமுதி வட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படவுள்ள தேவர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அஞ்சலி செலுத்த மிக முக்கிய பிரமுகர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் அதிகளவில் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அஞ்சலி செலுத்த வருவோர் சிரமப்படாத வகையில் அஞ்சலி செலுத்த வழியை முறையே போதிய அளவு பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க பொதுப்பணித்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் 8 ஆயிரம் காவல் துறை அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்ள 11 மருத்துவக்குழுக்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் அமைத்து தயார்நிலையில் வைக்க பொது சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதிய அளவு குடிநீர் வசதி ஏற்படுத்தவும், தற்காலிக கழிவறைகள் குப்பைத்தொட்டிகள் அமைக்கவும் உள்ளாட்சி துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் ரூபேஷ் குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, கூடுதல் ஆட்சியர் /திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) மா.பிரதீப்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆ.தங்கவேலு, பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ஆர்.ரவிச்சந்திரன், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.வெங்கடேசன், பரமக்குடி பொது சுகாதார துறை துணை இயக்குநர் பா.குமரகுருபரன்,ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குருதிவேல்மாறன், வட்டார போக்குவரத்து அலுவலர் கே.செல்வக்குமார் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.