உலக உணவு தினத்தை முன்னிட்டு, 5 காசுக்கு அரைபிளேட் பிரியாணி வழங்கப்படும்’ என அறிவித்த திண்டுக்கல் ஹோட்டல் முன்பு, மக்கள் கூட்டம் அலைமோதியது.உலக உணவு தினத்தை முன்னிட்டும், நாணயத்தின் பெருமையை அனைவரும் உணரும் வகையிலும், திண்டுக்கல்லைச் சேர்ந்த முஜிப் பிரியாணி கடை உரிமையாளர் ஷேக் முஜிபுர் ரஹ்மான், “முதலில் வரும் 100 பேருக்கு 5 காசுக்கு 90 ரூபாய் மதிப்புள்ள அரைபிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும்” என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், உலக உணவு தினமான நேற்று (16ம் தேதி) திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள முஜிப் பிரியாணி கடை முன்பு, காலை முதலே 200க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அதில் 150 பேரிடம், தலா 5 காசு நாணயத்தை பெற்றுக்கொண்டு, அரை பிளேட் சிக்கன் பிரியாணி மற்றும் தயிர் வெங்காயம், தால்சா பொட்டலங்கள் வழங்கப்பட்டது.இதுகுறித்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் கூறியதாவது; “நாணயங்களின் பெருமையை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். அத்துடன், இன்றைய தலை முறையினர் நாணயத்தின் மதிப்பை உணர வேண்டும். புழக்கத்தில் இல்லாத பழைய நாணயங்களை சேகரித்து வைத்திருப்போருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக, உலக உணவு தினத்தில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தினோம்” என்றார்.
– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து
You must be logged in to post a comment.