காவிரி விவசாயிகள் சங்கத்தலைவர் பி.ஆர் பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: காவிரி டெல்டா தொடர்ந்து போராட்ட களமாக மாறி வருவது வேதனையளிக்கிறது. பருவம் மாறி பெய்து வரும் தொடர் மழையால் ஒரு போக சம்பா சாகுபடி பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.வரும் 17ம் தேதி வட கிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில் சாகுபடி பணியை தொடர்வதா? இல்லையா? என்ற கேள்வி எழுந்து விவசாயப் பணிகள் முடங்கியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலங்களில் நடத்தியது போல் தமிழக அரசு வேளாண் துறை, கூட்டுறவுத்துறை, பொதுப்பணித் துறை விவசாயிகள் கொண்ட சிறப்பு ஆலோசனை கூட்டங்களை உயர் அதிகாரிகள் முன்னிலையில் உடனடியாக காவிரி டெல்டா மாவட்டங்களில் நடத்தப்பட்டு வேளாண் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.இதுவரையில் கூட்டுறவு வங்கிகள் வேளாண் கடன் வழங்க முன்வரவில்லை. நகைக்கடன் வழங்கியுள்ளதை கணக்கு காட்டி விட்டு வேளாண் கடன் வழங்காமல் மறுப்பது வேதனையளிக்கிறது.
கடந்த ஆண்டு கஜாபுயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனம் வழங்கிய இழப்பீடு தொகையைக் கூட விவசாயிகளுக்கு வழங்க கூட்டுறவு வங்கிகள் மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.உடனடியாக நிபந்தனையின்றி அனைத்து விவசாயிகளுக்கும் கடன் மற்றும் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கும் விரைந்து நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுகிறேன். மறுக்கும் பட்சத்தில் மத்தியகூட்டுறவு வங்கிகளை பல்லாயிரக்கணக்கான விவசாயிகளோடு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கிறேன் என்றார். அப்போது செய்தி தொடர்பாளர் என்.மணிமாறன் உடனிருந்தார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.