இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், மாடக்கொட்டான் ஊராட்சி மாயபுரத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி போடும் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் முகாமை துவக்கி வைத்தார்.கால்நடைகளுக்கு ஏற்படும் கால் மற்றும் வாய் கோமாரி நோயானது, கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதுடன் கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பு ஏற்படுத்துகிறது. இந்நோயால் கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலை திறன் குறைவு, கறவை மாடுகளின் சினைப் பிடிப்பு தடை, இளங்கன்றுகள் இறப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதன்படி, கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோய்களை தடுப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் 6 மாதத்திற்கு ஒரு முறை வீதம் இரண்டு சுற்றுகளாக கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் இதுவரை 16 சுற்று கோமாரி தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளன. இன்று துவக்கி வைக்கப்பட்ட 17-ஆவது சுற்று தடுப்பூசி முகாம் 14.10.2019 முதல் 03.11.2019 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 86,945 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. இப்பணிகளுக்காக மாவட்டத்தில் 50 கால்நடை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு கால்நடை மருத்துவர், உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர், கால்நடை உதவியாளர் ஒருங்கிணைந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நேரடியாக சென்று கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் வகையில் நடவடிக்கைக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொ) மரு.சுப்பையா பாண்டியன், உதவி இயக்குநர் மரு.ஆர்.ராதாகிருஷ்ணன், கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் மரு.பி.செங்குட்டுவன், இராமநாதபுரம் வட்டாட்சியர் தமிழ்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி உள்பட அரசு அலுவலர்கள், கால்நடை மருத்துவர்கள், கால்நடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
12
You must be logged in to post a comment.