சந்திரயான்-2 திட்டத்தில் விக்ரம் லேண்டர் செயலிழந்த நிலையில் அடுத்த முயற்சியில் வெற்றி பெறுவோம் – விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் வெங்கடராமன்

சந்திரயான்-2 திட்டத்தில் விக்ரம் லேண்டர் செயலிழந்த நிலையில் அடுத்த முயற்சியில் வெற்றி பெறுவோம் என திருவண்ணாமலை அருணை கல்லூரியில் நடந்த விழாவில் சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் வெங்கடராமன் கூறினார்.திருவண்ணாமலை,ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ மையம் மற்றும் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி இணைந்து உலக விண்வெளி வார விழா மற்றும் கண்காட்சியை கல்லூரியில் நடத்தின.நிகழ்ச்சிக்கு சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கடராமன், துணை குழுத் தலைவர் பி.முனிரத்தினம் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி செயலாளர் புர்க்கிந்த்ராஜ், முதல்வர் ஜெய்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் ஆனந்தராஜ் வரவேற்றார். முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் பேரன் ஷேக் தாவூத் வாழ்த்தி பேசினார்.சிறப்பு விருந்தினராக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.நிகழ்ச்சியில் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கடராமன் பேசுகையில், செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்ய உலக நாடுகள் 52 முறை செயற்கைகோள் அனுப்பி முயற்சி மேற்கொண்டது. அதில் 14 முறை தான் வெற்றி பெற்றது. ஆனால் இந்தியா முதல் முயற்சிலேயே வெற்றி பெற்றது. இஸ்ரோ தலைவர் சிவன் யாரும் எடுக்காததை எடுத்து முயற்சி செய்பவர். அவரது குறிக்கோள் மிகப்பெரியது. நிலவின் தென்துருவம் குறித்து ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தில் விக்ரம் லேண்டர் கட்டுப்பாட்டை இழந்தது. இந்த முயற்சியில் மீண்டும் இறங்கி அடுத்த ஆண்டுக்குள் வெற்றி பெறுவோம் என்றார்.நிகழ்ச்சியில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசுகையில், மாணவர்கள் கற்பனை உலகத்திற்கு செல்வதற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இஸ்ரோ விஞ்ஞானிகளின் கனவு நனவாகும் வகையில் தங்கள் பணியை விரும்பி செய்து வருகிறார்கள். இன்றைய போட்டி உலகத்தில் மற்றவர்களை காட்டிலும் நாம் தனித்து எப்படி இருக்க வேண்டும் என பணியாற்ற வேண்டும். உலக விண்வெளி வார விழா மற்றும் கண்காட்சியில் நீங்கள் பார்க்கும் விவரங்களை உங்கள் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மற்ற மாணவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள் என்றார். விழாவில் கலெக்டர் மற்றும் விஞ்ஞானிகளுக்கு கல்லூரி சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இக்கண்காட்சியில் ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ மையத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ராக்கெட் மற்றும் செயற்கைக் கோள் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் இஸ்ரோவின் சாதனைகள் அடங்கிய படங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.விண்வெளி சார்ந்த ஒளிப்படங்களும் திரையிட்டு காண்பிக்கப்படுகிறது. இந்த கண்காட்சியினை பள்ளி, கல்லூரி மாணவர்கள் இன்றும் (வியாழக்கிழமை) இலவசமாக காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று நடைபெறும் 2-ம் நாள் விழாவில் பிரமோஸ் ஏவுகணை நாயகன் பத்மபூஷண் சிவதாணு பிள்ளை கலந்து கொண்டு மாணவர்களுக்காக நடத்தப்படும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குகிறார்.முன்னதாக நேற்று காலை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற உலக விண்வெளி வார விழிப்புணர்வு நடைபயணத்தை முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜெ. அப்துல் கலாமின் பேரன் ஷேக் தாவூத் தொடங்கி வைத்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..