கொடைக்கானல் படகு குழாமை மீட்க கோரி நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் தலைமையில் கொடைக்கானலில் நகராட்சி அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.இதில் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார மாவட்டத்தைச் சார்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். முற்றுகையிட முயன்ற 150 பேரையும் காவல்துறை கைது செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் அவர்கள் கூறியதாவது :இந்தியாவில் மிக முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று கொடைக்கானல் என்பது நாம் அறிந்த ஒன்றே. இந்த கொடைக்கானலுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் இங்கு அமைந்துள்ள நட்சத்திர வடிவிலான ஏரி.
இந்தியா முழுவதும் இருந்து சுற்றுலா வரும் பல லட்சக்கணக்கான பயணிகள் ஏரியில் படகு பயணம் செய்து மகிழ்ந்து வருகின்றனர். ஏரியைச் சுற்றி சாலை இல்லாத அந்த காலத்தில் ஏரியைச் சுற்றி அமைந்துள்ள வீடுகளில் வசித்தவர்கள் தாங்கள் மறுகரைக்கு செல்வதற்காக படகுகளை பயன்படுத்தி பயணித்து வந்தனர். 1921 ஆம் ஆண்டு கொடைக்கானல் அரசு நிர்வாகத்தால் அந்த படகுகளை நிறுத்துவதற்கு ஒரு கூரை அமைத்துக் கொள்ள அவர்களுக்கு கொடைக்கானல் படகு குழாம் என்ற பெயரில் அனுமதி அளிக்கப்பட்டது. வெறும் எட்டு சென்ட் அளவிலான நிலம் ஒதுக்கப்பட்டு ஆண்டு வாடகையாக 8 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. 49 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட இந்த குத்தகை மீண்டும் 1970 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு ஆண்டு வாடகை அதே 8 ரூபாய்க்கு கொடுக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட 8 செண்ட் நிலம போக 10 செண்ட் அளவிற்கு நிலத்தை ஆக்கிரமித்து படகு குழாம் அமைத்துக்கொண்டது. கொடைக்கானல் போட் கிளப் என்ற பெயரில் இயங்கி வந்த இந்த தனியார் அமைப்பு இந்த குத்தகையை எடுத்து 150க்கும் மேற்பட்ட படகுகளை இறக்கி வருடத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்து வந்தது.
இந்நிலையில் இந்த 49 ஆண்டு குத்தகை காலம் முடிந்து பல மாதங்களாகியும் இன்னும் கொடைக்கானல் நிர்வாகம் இந்த படகு குழாமை கையகப்படுத்த வில்லை. ஏற்கனவே நிதிப் பற்றாக்குறையால் கொடைக்கானல் நகரத்தில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்த முடியாத நிலையில், கொடைக்கானல் ஏரியை சுத்தப்படுத்துவதற்கும், ஏரியை சுற்றி உள்ள சாலையை செப்பனிடவும் மட்டுமே ஆண்டுக்கு நகராட்சிக்கு பல கோடிகள் செலவாகிறது.
குத்தகை காலம் முடிந்து இருக்கின்ற படகு குழாம் நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்துவதன் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்ட முடியும், இதன்மூலம் கொடைக்கானல் நகர நிர்வாகத்தை சரி செய்ய முடியும் என முடிவெடுத்து நாம் தமிழர் கட்சியும் கொடைக்கானல் நகர பொதுமக்களும் இணைந்து கொடைக்கானல் படகு குழாமை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசு அதிகாரிகளிடம் வைத்துள்ளனர். படகு குழாம் மூலம் ஆண்டுக்கு பலகோடிகளை சம்பாதித்து ருசிகண்டு கோடீஸ்வரர்கள் அரசு அதிகாரிகளை “கவனித்து” மீண்டும் இந்த படகு குழாமை நடத்த முயற்சி செய்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பாக கொடுத்த விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கொடைக்கானல் படகு குழாம் நிர்வாகத்திற்கு ஆதரவாக காலம் தாழ்த்தி வரும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்து, அதிகாரிகள் நட்வடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின் பெயரில் நிறுத்திவைத்தோம்.
அரசு அதிகாரிகள் கேட்டுக்கொண்ட காலக்கெடு முடிவடைந்த நிலையில் இந்தப் போராட்டம் நடத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளோம் என்பதை வருத்ததுடன் தெரிவித்து அக்டோபர் 4ம் தேதி இன்று காலை 10 மணிக்கு எனது தலைமையில் கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போது 150க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி உறவுகளை காவல்துறை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது என கூறினார்.
செய்தி வி காளமேகம் மதுரை
You must be logged in to post a comment.