மத்திய அரசின் சிறப்பு கவனம் செலுத்தக்கூடிய மாவட்டங்களில் ஒன்றான ராமநாதபுரம் மாவட்டத்தின் ஊரகப் பகுதி பொதுமக்களிடையே கணினி மற்றும் இணையதள பயன்பாடு குறித்து பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பி.என்.பணிக்கர் அறக்கட்டளையுடன் ஒருங்கிணைந்து மின்னணு நூலகத்தை ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தகொ.வீர ராகவ ராவ் திறந்து வைத்தார்.மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:பாரதப் பிரதமர் உத்தரவின்படி, இந்திய அளவில் சிறப்பு கவனம் செலுத்தக்கூடிய மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 117 மாவட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டமும் ஒன்றாகும். அதனடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் பொது மக்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம், பொது சுகாதாரம், கல்வி வளர்ச்சி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் திறன் மேம்பாடு அடிப்படை உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு உள்ளிட்ட ஐந்து காரணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.தற்போதைய கால கட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் காரணமாக பொதுமக்களிடையே கணினி மற்றும் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளது. பெரும்பான்மையான அரசு நலத்திட்டங்கள் இணையவழியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொதுமக்களுக்கு கணினி மற்றும் இணைய பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பி.என்.பணிக்கர் அறக்கட்டளையுடன் ஒருங்கிணைந்து மாவட்ட நிர்வாகம் மூலம் மின்னணு நூலகம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இம்மின்னணு நூலகத்தில் தற்போது 5 கணினிகள், 2 மடிக்கணினிகள், இணைய வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறை சார்ந்த நூல்கள் மின்னணு வடிவில் கணினிகளில் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர இம்மையத்தில் ஊரகப் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு கணினி மற்றும் இணையதள பயன்பாடு குறித்த பயிற்சி வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிலும் கிராம ஊராட்சி சேவை மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இம்மையங்கள் மூலம் பொதுமக்கள் அரசு நலத்திட்டங்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். இச்சேவை மையங்கள் அனைத்திலும் இத்தகைய மின்னணு நூலகம் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊரக பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பெண்கள் அனைவரும் கணினி மற்றும் இணையதள பயன்பாடு குறித்து விழிப்புணர்வு பெற்று பயனடைவர் என்றார் .பி.என்.பணிக்கர் அறக்கட்டளை துணைத்தலைவர் என்.பாலகோபால், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் எல்.சொர்ணமாணிக்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எஸ்.எஸ்.சேக் அப்துல்லா, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன் உட்பட அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
6
You must be logged in to post a comment.