நெல்லை மாவட்டம் கடையம் அருகே கோவிலூற்று கிராமத்தின் மைய பகுதியில் கல் தூண்களை கொண்டு கட்டப்பட்ட பழமையான மண்டபம் இருந்தது. இதனை இப்பகுதி மக்கள் சவுக்கு மண்டபம் என்ற பெயரில் அழைத்து வந்தனர்.இந்த பழங்கால மண்டபம் நேற்று 02.10.19 மதியம் மதுரையில் இருந்து உரம் லோடு ஏற்றி வந்த லாரி, வள்ளியம்மாள் புரத்தில் லோடு இறக்கி விட்டு வடமலைபட்டி வழியாக கோவிலூற்றுக்கு சென்றது. அப்போது அங்குள்ள மண்டபம் அருகே லாரி ஒரு வளைவில் திரும்ப முடியாமல் நின்றது. இதனால் லாரியை அதன் ஓட்டுனர் பின்னோக்கி எடுத்து வந்துள்ளார். அப்போது லாரி, மண்டபத்தின் கல் தூணில் மோதி பழமையான மண்டபம் இடிந்து தரைமட்டமானது.
அப்போது மண்டபத்தின் உள்ளே அமர்ந்திருந்த இந்த பகுதியை சேர்ந்த செல்லப்பா மனைவி தாமரைவள்ளி (67), ரத்தின சபாபதி மனைவி சீதாலட்சுமி (42), வேல்சாமி மனைவி குத்தாலவடிவு (75), ஜெயபிரகாஷ் மனைவி மகேஸ்வரி (42), அவரது மகள் மனிஷா (11) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். இந்த கோர சம்பவத்தை நேரில் பார்த்த அருகிலுள்ளவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஓடி வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகள் இடையே சிக்கியவர்களை மீட்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இதில் தாமரைவள்ளி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் சீதாலட்சுமி, மகேஸ்வரி , மனிஷா ஆகியோர் மேலதிக சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கும், குத்தாலவடிவு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு தலைமை மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை என கூறி கோவிலூற்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஊர் பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த முற்றுகை போராட்டம் பற்றி தகவல் அறிந்த அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷினி, கடையம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயகுமார், ஆலங்குளம் தாசில்தார் கந்தப்பன், சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தாமரைவள்ளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் முருகனை கைது செய்தனர்.இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.