சென்னையில் வெல்ஃபேர் கட்சி சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது . இது சம்பந்தமாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “ சங்பரிவார்கள் வழிநடத்தும் பாரதீய ஜனதா கட்சி , நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியை கைப்பற்றிய பிறகு இந்திய நாட்டின் ஜனநாயகமும் அமைப்புச் சட்டமும் கேள்விக்குறியாகியுள்ளது. அனைத்து விதமான அமைப்புச் சட்ட விதிகளும் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறது. தங்களுடைய கையாட்களை அவற்றின் தலைவர்களாக நியமித்து தங்கள் ஆணைப்படி கேட்கும் ஏவல் ஆட்களாக வைத்து அமைப்புச் சட்டங்கள் மாற்றப்பட்டிருக்கிறது.
இன்று வரை கும்பல் கொலைகள் என்ற பெயரிலே சங்பரிவார பயங்கரவாதிகள் நூற்றுக்கும் மேற்பட்ட தலித்துகளையும் சிறுபான்மையினரையும் கொலை செய்து கொண்டிருக்கின்றார்கள். கும்பல் கொலைகளில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை அளிப்பதற்கு பகரமாக அரசுப் பதவிகளை அளித்து வருகிறது பாரதிய ஜனதா அரசு.
இந்திய நாட்டின் ஆர்.எஸ்.எஸ். தத்துவத்தை நிலை நிறுத்த உழைத்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு .மாநில உரிமைகளை செயல் இழக்க செய்து ஒற்றை தேசம் ஒற்றை கலாச்சாரம் ஒற்றை மொழி என்ற சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்த துடிக்கிறது அதனுடைய வெளிப்பாடுதான் தேசிய கல்விக்கு கொள்கை என்ற ஒற்றை கல்வி கொள்கை, NIA என்ற ஒற்றை போலீஸ், நீட் என்ற ஒற்றை தேர்வு…
தற்போது நாடாளுமன்றத்தையும் அமைப்புச்சட்டத்தையும் இழிப்படுத்திக் கொண்டு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகளை ரத்து செய்ததுடன் அதை பிளந்திருக்கிறது பாஜக அரசு. இந்தியா எனும் மாபெரும் தேசத்தை ஒற்றை சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்த்துவதற்கு உண்டான எல்லா முயற்சிகளையும் இவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இதே தடுத்து நிறுத்தப்பட வேண்டிய பேராபத்து என்பதை வெல்ஃபேர் கட்சி உணர்ந்துள்ளது. அதற்காக வேண்டி இந்த நாட்டை நேசிக்கும் ஜனநாயக முற்போக்கு சக்திகளை ஒருங்கிணைத்து கொண்டு பாஜக அரசை விரட்டுவதற்கான முன்னெடுப்புகளில் வெல்ஃபேர் கட்சி களமிறங்கியுள்ளது” என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன் ஒரு பகுதியாக இந்திய நாடு முழுவதும் சங்பரிவார் பாஜக அரசுக்கு எதிரான போராட்டங்களையும் தேசிய அளவில் வெல்ஃபேர் கட்சி முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாசிச சங்பரிவார் அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் 09 ஆகஸ்டு வெள்ளி கிழமை மாலை 4 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வெல்ஃபேர் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஆ. சுப்ரமணி ஆறுமுகம் , மாநில பொதுச் செயலாளர் கே எஸ் அப்துல் ரஹ்மான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவின் குமார், பேராசிரியர் சுந்தரவள்ளி, வழக்கறிஞர்கள் ரஜினிகாந்த், காலேஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முஸம்மில் இப்ராஹிம் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியை மாநிலச் செயலாளர் முகமது கவுஸ் வழிநடத்தினார்.
You must be logged in to post a comment.