கஜா புயல் நிவாரணம் கிடைக்காததால் விரக்தியடைந்த விவசாயி ஒருவர், சேதமடைந்த தனது வீட்டை நினைவு இல்லமாக மாற்றி நூதன போராட்டம் நடத்தி வருகிறார்.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உதய மார்த்தாண்டபுரம் மாரியப்பா நகரைச் சேர்ந்தவர் அழகிரிசாமி (71). இவருக்கு சாந்தா என்ற மனைவியும், மூன்று மகன்கள் ஒரு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. விவசாயியான அழகிரிசாமி, பாசனதாரர்கள் சங்க செயலாளராகவும் உள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலின் தாக்கத்தால் இவரது ஓட்டு வீடு முற்றிலும் சேதமானது. இதையடுத்து, சேதமடைந்த தனது வீடு மற்றும் விழுந்த தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி பலமுறை அதிகாரிகளை சந்தித்து புகார் கொடுத்தார். ஆனால், இன்றுவரை எந்தவித நடவடிக்கையோ, நிவாரணமோ கிடைக்கவில்லை.இதனால் விரக்தியடைந்த அழகிரிசாமி, நிவாரணம் கொடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் சேதமடைந்த தனது வீட்டில் ‘கஜா புயல் நினைவு வீடு’ என்று பேனர் வைத்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து அழகிரிசாமி கூறும்போது, ‘‘கஜா புயல் நிவாரணம் கேட்டு அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தேன். எந்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் மனவேதனையில் எனது வீட்டை சீரமைக்காமல், அதிகாரிகளை கண்டித்தும் உடனே நிவாரணம் வழங்கக்கோரியும் ‘கஜா புயல் நினைவு வீடு’ என்று பேனர் வைத்துள்ளேன்’’ என்றார்.
You must be logged in to post a comment.