ஆன்லைன் மீன் விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக, செல்போன் வழியாக மீன்கள் வாங்குவதற்கு புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்த தமிழக மீன்வளத்துறை முடிவு செய்துள்ளது.வாடிக்கையாளர்கள் ஆன் லைன் மூலம் பதிவு செய்து மீன்களை வாங்குவதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மீன்வளத் துறை சார்பில் www.meengal.com என்ற இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம், மாதந்தோறும் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஆன்லைன் மீன் விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக, புதிய செயலியைத் தொடங்க தமிழக மீன்வளத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, தனியார் நிறுவனத்தின் மூலம் செயலி ஒன்றை உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது; “ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள இணைய தளத்தை வழக்கமான வாடிக்கையாளர் மட்டும்தான் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அத்துடன், இணைய தளத்துக்குச் சென்று மீன்களை பதிவு செய்வதைவிட, செல்போனில் ஒரு செயலி இருந்தால் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சுலபமாக இருக்கும் என்று தோன்றியது.எனவே, வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிய செயலியை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம். தனியார் நிறுவனத்தின் மூலம் புதிய செயலியை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த செயலியை நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்” என அவர் தெரிவித்தார்.
You must be logged in to post a comment.