இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எம்.எம்.வார்டு உள்நோயாளிகள் பலருக்கு வலி நிவாரணி, புண் குணப்படுத்துவதற்கான ஊசி செலுத்தப்பட்டது. ஊசி செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் பலருக்கு திடீர் காய்ச்சல், வலிப்பு ஏற்பட்டதால் அச்சமடைந்தனர். மீண்டும் உரிய சிகிச்சை அளிக்கக் கோரி வார்டின் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு பணி மருத்துவர் ஆலோசனை இன்றி பயிற்சி செவிலியர்கள் மூலம் ஊசி செலுத்தப்பட்டதால், பல்வேறு பக்க விளைவு நோய்கள்
ஏற்படுவதாக அவதிக்குள்ளான நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் உயர்தர சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர் என்ற வலுவான குற்றச்சாட்டு ஏற்கனவே உள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு கவனக்குறைவான சிகிச்சை அளிப்பதால் அரசு மருத்துவமனைகள் மக்களின் நம்பிக்கையை இழந்து வருகின்றன என சமூக ஆர்வலர்கள் மத்தியில் சந்தேகம் எழும்பியுள்ளது. சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரத்திற்கு பிறகு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் அடிக்கடி திடீர் ஆய்வு செய்து தரமான சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர். ஆனால், டாக்டர்கள் யாரும் அமைச்சர், ஆட்சியர் அறிவுறுத்தலை சம்பிரதாயத்திற்கு கூட ஏற்காமல், தாங்கள் நடத்தும் கிளினிக் வருமானத்தை மட்டும் இலக்காக கொண்டு செயல்படுகின்றனர். உறுதியான நடவடிக்கை எடுக்க தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன் வர வேண்டும் ?
You must be logged in to post a comment.