தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டலாங்குளத்தில் வீரன் அழகுமுத்து கோன் 309-வது பிறந்த நாள் விழா ஜூலை 11-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் அழகுமுத்து கோன் வாரிசுதாரர்கள், நலச்சங்கம், தமிழக யாதவ இயக்க கூட்டமைப்பு, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் எம்.ஜெபராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில், வீரன் அழகுமுத்து கோன் 309-வது பிறந்த நாள் விழா கொண்டாடும் கிராமங்களில் விழா பொறுப்பாளர்கள் காவல்துறையிடம் உரிய முன் அனுமதி பெற வேண்டும். விழா தொடர்பான பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைப்பதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் பிளக்ஸ் பேனர்கள் வைப்பவர்கள் மீது சட்ட ரீதியான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அனுமதி பெற்று வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்கள் 11-ம் தேதி மாலை 6 மணிக்குள் அகற்றப்பட வேண்டும்.
விழாவுக்கு இருசக்கர வாகனங்களில் வருவதற்கு அனுமதி கிடையாது. வீரன் அழகுமுத்து கோன் பிறந்த நாள் விழாவுக்கு வரும் வாகனங்கள் நான்குவழிச்சாலையில் சரவண பவன் ஹோட்டல் அருகே உள்ள ஆர்ச் வழியாக கட்டாலங்குளம் செல்லும் சாலையில் வர வேண்டும். விழா முடிந்து வெளியே செல்லும் போது,செட்டிக்குறிச்சி சந்திப்பில் இருந்து திருநெல்வேலி மார்க்கமாக தெற்கு நோக்கி கயத்தாறு வழியாகவும்,சங்கரன்கோவில், கோவில்பட்டி, மதுரை மார்க்கமாக செல்பவர்கள் கழுகுமலை வழியாக மட்டும்தான் செல்ல வேண்டும். விழாவின் போது பட்டாசுகள் வெடிக்க அனுமதி கிடையாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.காவல் ஆய்வாளர்கள் சுதேசன், அய்யப்பன், ஆவுடையப்பன், முத்துலட்சுமி, பத்மாவதி, உதவி ஆய்வாளர் தர்மராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
You must be logged in to post a comment.