சிறு வயதில் குடும்ப வறுமை காரணமாக அனாதை இல்லத்தில் வளர்ந்த அப்துல் நாசர் கொல்லம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார். இவரின் ஐந்து வயதில் தந்தை மரணித்து விட இவருக்கு மூத்த மூன்று சகோதரிகளையும் காப்பாற்ற அண்டை வீடுகளில் கூலி வேலை செய்தும் போதிய வருமானம் இல்லாமல் தவிக்க, தனது மகனுக்காவது வயிராற உணவு கிடைக்கட்டும் என்று இவரது தாய் தீர்மானித்து அநாதை இல்லத்தில் சேர்த்து விட்டுள்ளார்.
தலசேரி தாருல் ஸலாம் யதீம்கானாவில் ஆரம்ப கல்வியும், திருச்சூர் இஸ்லாமிக் ஆர்பனேஜ் கல்லூரியில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்ற அப்துல் நாசர், யதீம்கானா உதவியுடன் பிரண்ணன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். தொடர்ந்து பகுதி நேர வேலை செய்து கொண்டே கோழிக்கோடு பரூக் கல்லூரியில் சேர்ந்து எம.ஏ, தேர்ச்சி பெற்று, பி.எட்., மற்றும் முதுகலை சோசியல் ஒர்க் படிப்பும் தேர்ச்சி பெற்றவர். ஆரம்பத்தில் கேரள சுகாதார துறையில் ஆய்வாறராக பணியில் சேர்ந்த அப்துல் நாசர் 2006 ல் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று துணை ஆட்சியராக பணியை துவங்கியவர்.
பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி 2015 ல் கேரளாவில் சிறந்த துணை ஆட்சியருக்கான விருதை பெற்றவர். 2013, 2017 ம் ஆண்டுகளில் மத்திய அரசின் ஹஜ் கமிட்டி ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகித்தார். தற்போது கேரள அமைச்சரவை சிபாரிசின் பேரில் கொல்லம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார் அப்துல் நாசர்.
சிறு வயதில் 1982ம் அனாதை இல்லத்தில் வளரும் போது ஆய்வுக்கு வந்த இளம் ஐஏஎஸ் அதிகாரி அமிதாப் காந்தை பார்த்து மனதுக்குள் தானும் வளர்ந்து இதேபோல் ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவை வளர்த்தேன் என்று பெருமையுடன் கூறுகிறார.
செய்தி தொகுப்பு…அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர்..கீழை நியூஸ்
You must be logged in to post a comment.