இராமநாதபுரத்தில் சமுதாய அடிப்படையிலான பேரிடர் மேலாண் திட்டம் சார்பில் சார்பாக பேரிடர் போன்ற அவசர கால சூழ்நிலையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து முதன்மை பொறுப்பாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பேசியதாவது: பேரிடரால் ஏற்படும் தாக்கத்தை குறைத்து உயிர், பொருள் சேதம் போன்ற பேரிழப்புகளை தவிர்த்து பாதுகாப்பான முறையில் எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பேரிடர் கால சூழ்நிலையில் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள கிராம ஊராட்சி அளவில் பேரிடர் மேலாண் குழுக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக்குழுவில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் உட்பட தன்னார்வலர்கள் பங்கேற்கும் விதமாக இக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கிராமப் பகுதிகளில் சமூக அக்கறை கொண்டு பொறுப்புணர்வுடன் தன்னார்வமாக செயல்படக்கூடிய இளைஞர்களை ஒருங்கிணைத்து மீட்பு பணிகளை மேற்கொள்ள பேரிடர் கால முதன்மை பொறுப்பாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 5,500 முதன்மை பொறுப்பாளர்கள் உள்ளனர். இத்தகைய இளைஞர்களுக்கு பேரிடர் போன்ற அவசர கால சூழ்நிலையில் பேரிடரின் தாக்கத்தை குறைப்பதற்கு பின்பற்ற வேண்டிய எளிய நெறிமுறைகள் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. தீயணைப்பான் கருவி பயன்படுத்துதல், நீர் சுழ்ந்த தாழ்வான பகுதிகளில் உள்ள நபர்களை காப்பாற்றும் போது கையாள வேண்டிய நடைமுறைகள், கயிறு, பிளாஸ்டிக் மரம் போன்ற சாதாரண பொருட்களை கொண்டு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரித்தல் போன்ற பயிற்சி வழங்கப்பட்டது. முதன்மை பொறுப்பாளர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடும் போது முதலில் தங்களது பாதுகாப்பை உறுதி செய்து கவனமுடன் செயல்பட வேண்டும் என பேசினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த.ஹெட்ஸி லீமாஅமாலினி, சமுதாய அடிப்படையிலான பேரிடர் அபாய மேலாண்மை திட்ட அலுவலர் பால் பேட்ரிக், மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் ஜிலானி, இராமநாதபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெ.அருளானந்து உட்பட அரசு அலுவலர்கள் முதன்மை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.