தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று (17/05/2019) முதல் அமல்..

தமிழகத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது வரை சென்னை மாநகராட்சியில் மட்டும் மொத்தம் 250 டன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோர், தேக்கி வைப்போர், விற்பனை செய்வோர், அதை பயன்படுத்துவோர் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அபராதம் விதிப்பதற்கான அரசாணை, கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. எனினும், சில மாதங்களில் அதிகாரிகள் சோதனைகளை கைவிட்டதன் காரணமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மீண்டும் பயன்பாட்டில் வந்தது.

இது தொடர்பாக செய்திகள் வெளியானதும், விழித்துக்கொண்ட அதிகாரிகள் தற்போது அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க உள்ளனர். அதன்படி, இன்று முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தால் அபராதம் விதிக்கும் அரசாணையை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அரசாணையின் அடிப்படையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோருக்கு ரூ.2 லட்சம், தேக்கி வைப்போருக்கு ரூ.1 லட்சம், விற்பனை செய்வோருக்கு ரூ. 50,000 ஆயிரம், கடைகளின் பயன்படுத்துவோருக்கு ரூ. 25,000 மற்றும் நுகர்வோருக்கு ரூ.500 என முதல்கட்ட அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அபராத நடவடிக்கைகள் தொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகங்களுக்கு உள்ளாட்சித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..