ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்கள் சி.டி., ஸ்கேன், எம் ஆர் ஐ ஸ்கேன் எடுப்பதற்கு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் சிரமப்படுவதாகவும் வந்த தகவலையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று (12.6.2019) மருத்துவமனைக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தெரிவித்ததாவது: ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்கள் நலனுக்காக சி.டி., ஸ்கேன், எம் ஆர் ஐ ஸ்கேன் போன்ற நவீன மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 40 நபர்கள் சிடி ஸ்கேன் செய்து பயனடைந்து வருகின்றனர். மே மாதம் மட்டும் 1,163 நபர்களுக்கு, நடப்பு மாதத்தில் இதுவரை 12.06.2019 வரை 475 நபர்களுக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. சிடி ஸ்கேன் எடுப்பதற்கு ஒரு நபருக்கு ரூ.500 கட்டணமாக பெறப்பட்டு உரிய ரசீது வழங்கப்படுகின்றது. ஸ்கேன் பிரிவில் பணியிலிருந்த மருத்துவர் மகப்பேறு விடுப்பில் சென்றுள்ள காரணத்தினால் மாற்று தொழில் நுட்பவியலரை (டெக்னீசியன்) கொண்டு ஸ்கேன் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஸ்கேன் எடுப்பதற்கு காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு தீர்வு காணும் விதமாக உரிய மருத்துவரை மாற்றுப்பணியில் உடனடியாக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, துணை இயக்குநர் (காசநோய்) மரு.சாதிக்அலி, ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.பி.கே.ஜவஹர்லால் ஆகியோர் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.