இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் பெற்று பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுக்கள் பெற்றுக் கொண்டார். மனுக்கள் மீது ஆய்வு செய்து துரித நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன் குறைபாடுடைய பயனாளி ஒருவருக்கு காதொலிக்கருவி, பயனாளி ஒருவருக்கு விலையில்லா தையல் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடம் சென்று மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுக்கள் பெற்றார்.
இக்கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் கொடுக்க வந்த அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் உணவு பொட்டலங்களை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணபிரான், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் தணிகாசலம் உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.