இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும், தமிழக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனை, திமுக., காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் களி 1,27,122 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதியில், திருச்சுழி, அறந்தாங்கி, திருவாடானை, பரமக்குடி (தனி), ராமநாதபுரம், முதுகுளத்தூர் சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 15, 57,910 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் பாஜக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பகுஜன் சமாஜ், அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் உள்பட 23 பேர் போட்டியிட்டனர். ஏப்ரல் 18 ஆம் தேதி நடந்த தேர்தலில் 10,60,802 வாக்குகள் மற்றும் 5,799 தபால் வாக்குகள் பதிவாகின. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில், 28 சுற்றுகளாக எண்ணப்பட்டன.
மே 23 காலை 11 மணிக்கு முதல் சுற்று முடிவு அறிவிக்கப்பட்டது. மே 24 அதிகாலை இறுதி முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி 2,358 தபால் வாக்குகளுடன், 4,69,943 வாக்குகள் பெற்று 1,27,122 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தோல்வியடைச் செய்தார்.
நயினார் நாகேந்திரனுக்கு 3,42,821 வாக்குகள் கிடைத்தன. இதில் 1,517 தபால் வாக்குகள் அடங்கும்.
அமமுக., வேட்பாளர் ஆனந்த் 611 தபால் வாக்குகளுடன் 1,41,806 வாக்குகள் பெற்றார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புவனேஸ்வரிக்கு 260 தபால் வாக்குகளுடன் 46,385 வாக்குகள் கிடைத்தன.
விஜய பாஸ்கர் (மக்கள் நீதி மய்யம்) 14,925 வாக்குகள் பெற்றார்.
பஞ்சாட்சரம் (பகுஜன் சமாஜ்) 3,681 வாக்குகள் பெற்றார்.
பதிவான 5,799 தபால் வாக்குகளில் 777 வாக்குகள் செல்லாதவை. 59 தபால் வாக்குகள் உள்பட 7,536 வாக்குகள் நோட்டாவில் பதிவாகின.
இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றமைக்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடமிருந்து நவாஸ் கனி பெற்றுக் கொண்டார்.
You must be logged in to post a comment.