திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 24 பேர் வைப்புத் தொகையை இழந்தனர். பாராளுமன்ற தேர்தல் 2019 முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சியை பிடித்தது. தமிழகத்தில் திமுக 38 இடங்களை பிடித்தது.
தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி ஒரு தொகுதியின் மொத்த வாக்காளர்களில் 6 இல் ஒரு பங்கு வாக்குகளையோ அல்லது வெற்றி வேட்பாளர் பெற்ற வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கு வாக்குகளையோ பெற வேண்டும். அப்போதுதான் அவர்கள் வேட்புமனு தாக்கலின்போது செலுத்தப்பட்ட வைப்புத் தொகை திரும்ப வழங்கப்படும்.
தேர்தல் ஆணையத்தின் விதிகளின் படி திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட 26 வேட்பாளர்களில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் மட்டுமே டெபாசிட் தொகையைத் திரும்பப் பெறும் அளவுக்கு வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் நாம் இந்தியர் கட்சி, ஜம்மு-காஷ்மீர் நேஷனல் பேந்தர் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 24 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.