இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளை பின்பற்றி வெளிப்படையாக பணியாற்ற வேண்டும் இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்…

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. அவர் கூறியதாவது: இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் வாக்கு எண்ணும் மையமான இராமநாதபுரம்  அண்ணா பல்கலை., பொறியியல் கல்லூரியில் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள் முன்னிலையில் முத்திரையிடப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு  கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மே 23ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையை பொறுத்தவரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தனித்தனி 6 பிரிவுகளாக அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்காணிப்பில் நடைபெறும். பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் கண்காணிப்பில் நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கையின்போது முதலாவதாக தபால் வாக்குகள், அதனை தொடர்ந்து மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெறும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளுக்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மேஜையிலும் தலா ஒரு வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர், நுண் பார்வையாளர், உதவியாளர் என 3 அலுவலர்கள் வீதம் 42 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவர். வாக்கு எண்ணும் பணி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி மே 17, 20 ல் மேலும் 2 பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அறையிலிருந்து வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு வரப்படும். அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்படும் பெட்டியில் உள்ள முத்திரையின் தன்மையை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் உறுதி செய்ய வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வரிசை எண்விபரம், படிவம் 17 உடன் ஒப்பிட்டு உறுதி செய்ய வேண்டும்.

இவ்விரண்டு விபரங்களை உறுதி செய்த பிறகு சம்பந்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் குறித்த விபரங்கள், வேட்பாளர்கள் வாரியாக பெற்ற வாக்குகள் உள்ளிட்ட விவரங்களை உரிய படிவத்தில் பிழையின்றி பூர்த்தி செய்து, ஒவ்வொரு சுற்றாக சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் அலுவலர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் கைபேசி உள்பட எந்தவிதமான மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல கட்டாயம் அனுமதி இல்லை. தேர்தல் வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் பாரபட்சமுமின்றி இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளை முறையே பின்பற்றி வெளிப்படையாகபணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, உதவி தேர்தல் அலுவலர்கள் மதியழகன், சுமன், ராமன், கயல்விழி, சுப்பையா, கார்த்திகைசெல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணபிரான், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் முதன்மை பயிற்றுநர் ஷேக்முகையதீன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..