இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் சுந்தரமுடையான் அருகே பிள்ளைமடம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன், 35. இவர் ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் வேட்டைத் தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லட்சுமி, 31. இவர்களுக்கு 8 வயது ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் 2வது முறை கர்ப்பம் தரித்த லட்சுமி, மண்டபம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர் சிகிச்சை எடுத்து வந்தார். நிறை மாத கர்ப்பிணியான லட்சுமிக்கு மே 7 ஆம் தேதி பிரசவம் எதிர்பார்க்கப்பட்டது. பிரசவ நாளை விட 2 நாட்கள் கடந்தையடுத்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று முன் தினம் இரவு அனுமதிக்கப்பட்டார். சுக பிரசவத்திற்காக டாக்டர்கள் காத்திருந்த நிலையில், நேற்று காலை சிசுவின் தலை வெளியே தெரிந்தது. இதனால் அச்சமடைந்த லட்சுமியின் உறவினர்கள் அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவ பணியாளர்களை வற்புறுத்தினார். டாக்டர்களின் அலட்சியம் தொடர்ந்ததால் தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனால் ஆவேமடைந்த லட்சுமியின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்தனர். டாக்டர்களின் சமரசத்தையடுத்து லட்சுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இராமநாதபுரம் அரசு மருத்துவமனை டாக்டர்களின் அலட்சியத்தால் தாயும், சேயும் உயிரிழந்த சம்பவத்தில் விரிவான விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நோயாளிகளின் சிகிச்சையில் மெத்தனப் போக்கு காட்டும் டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
You must be logged in to post a comment.