திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் சுமார் 3 லட்சத்திற்கும் மேலான மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்தவர்களே.
மேலும் இங்கு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்களே இருப்பதால் நிலக்கோட்டை சுற்றியுள்ள கிராமப்புற பொதுமக்கள் நிலக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையை நம்பியே உள்ளனர். இந்த தலைமை மருத்துவமனை கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. தொடர்ந்து பல ஆண்டுகளாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
இந்நிலையில் இந்த மருத்துவமனையில் அனைத்து வசதிகளையும் கொண்ட கட்டிடங்கள் மற்றும் மருந்து, மாத்திரைகள் இருந்தும் முறையாக சிகிச்சை அளிக்க போதுமான அளவுக்கு டாக்டர்கள் இல்லை என கூறப்படுகிறது. தற்போது நிலக்கோட்டை அரசு மருத்துவமனையை பொருத்தவரை 14 டாக்டர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் வெறும் மூன்று டாக்டர்களே பணிபுரிந்து வருகிறார்கள். அதுவும் இன்றைய காலகட்டத்தில் பிரசவத்திற்கு தனியாக டாக்டரும் குழந்தைகளுக்கு தனியாக டாக்டரும் இருக்க வேண்டியது தலையாய கடமையாகும். ஆனால் இத்துறைக்கென பிரத்யேக மருத்துவர்கள் கிடையாது. அதேபோன்று நிலக்கோட்டை பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நேரிடும் என்பதால் என்பதால் 24 மணி நேரமும் டாக்டர்கள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் அதற்கான வசதியும் கிடையாது.
இவ்கு காலை 7 மணி முதலே நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலையில் நிலக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. எனவே இதுபோன்ற நிலையை தவிர்க்க உடனடியாக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் நிலவும் டாக்டர்கள் பற்றாக்குறையை போக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment.