ராமேஸ்வரம் தங்கச்சிமடம் ஜான்சன் என்பவரது விசைப்படகில் விஜி, பரதன், சேவியர், ராஜா ஆகியோர் 1996 மே 4ல் கடலுக்குச் சென்றனர். மே 5ல் கரை திரும்ப வேண்டிய படகு கரை திரும்பவில்லை. விசாரணையில், படகு கடலில் மூழ்கியதில் பரதன் உள்பட 4 பேரை தேடி வருவதாக தகவல் தெரிவித்தனர்.
மாயமான மீனவர்களை பல நாட்களாக தேடிய நிலையில் மாயமானவர்கள் பட்டியலில் பரதன் உள்பட 4 பேரும் சேர்க்கப்பட்டனர். அவர்களது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு மீன்வளத்துறை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஏப்.9 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யூடியூப் சானலில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக என தகவல் வெளியானது. அதில் தனது தந்தை பரதன் பிச்சை எடுக்கும் கும்பலுடன் பரிதாபமான நிலையில் சேர்ந்து வாழ்ந்து வருகிறார் என்பதை பரதன் குடும்பத்தினர் உறுதி செய்தனர்.
இந்நிலையில் பரதன் குடும்பத்தினரை சந்தித்து மீன்வளத்துறை அதிகாரிகள் பரதன் மாயமானது குறித்து எழுத்து பூர்வ மனு பெற்று கொண்டனர். 23 ஆண்டுகளுக்கு முன் மாயமான மீனவர் பரதனை இலங்கையில் இருந்து மீட்டு ஒப்படைக்க வேண்டும். பரதன் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் நிவாரண நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரதன் மகள் சரவண சுந்தரி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
You must be logged in to post a comment.