திண்டுக்கல் மாவட்டத்தில் நாளுக்குநாள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பெருகிக்கொண்டே வருகின்றன. வாகனங்களின் பெருக்கத்திற்கு ஏற்றார் போல விபத்துகளும் மிக அதிகமாக ஏற்பட்டு வருகின்றன. தமிழக அரசின் சார்பிலும் போக்குவரத்து காவல்துறையின் சார்பிலும் ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியும் சட்டத்தை கடுமையாக்கியும் கூட விபத்துகள் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் விபத்தை குறைப்பதற்காக காவல்துறையால் பல்வேறு இடங்களின் வாகன வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக பேரிகார்டுகள் (தடுப்புகள்) அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகள் அனைத்துமே பல்வேறு தனியார் வர்த்தக நிறுவனங்களால் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது.
இலவசமாக அளிக்கும் காரணத்தினால் தங்கள் நிறுவனத்தின் விளம்பரங்களை பேரிகார்டின் மையப்பகுதி முழுவதும் மூன்று அடி அளவிற்கு பேரிகார்டின் பின்பக்கம் வரும் வாகனங்களை காண முடியாத வகையில் மறைத்து எழுதப்பட்டுள்ளன.
இதனால் இரு சக்கர மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் மூன்று சக்கர மோட்டார் பைக்குகளில் செல்லும் மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி காரில் பயணிக்கும் பொதுமக்களும் பேரிகார்டின் பின்னால் வரும் வாகனங்களை பார்க்க முடியாமல் விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
தற்போது பழனியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக இன்று (02.05.19) ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட பேரிகார்டுகள் பழனி காவல்துறையால் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட அனைத்து பேரிகார்டுகளும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் முழுமையாக விளம்பரங்களால் மறைக்கப்பட்ட நிலையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
எனவே, பேரிகார்டின் மையப்பகுதி முழுவதையும் மறைக்காமல் யாருக்கும் இடையூறு இல்லாமல் வர்த்தக விளம்பரங்களை செய்துகொள்ள விளம்பரதாரர்களுக்கு அறிவுறுத்தவும், திண்டுக்கல் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி உடனடியாக விபத்தை ஏற்படுத்தும் அனைத்து பேரிகார்டுகளையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்திடவும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் P.செல்வநாயகம் – மாவட்ட தலைவர் S.பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.